வீடியோ அழைப்பில் கணவர்... இஸ்ரேலில் ரொக்கெட் வீச்சுக்கு பலியான இந்திய பெண்: பகீர் சம்பவம்
இஸ்ரேல் நாட்டில் அஷ்கெலோன் பகுதியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்த ரொக்கெட் தாக்குதலில் இந்தியாவின் கேரள மாநிலத்து பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் மனைவி 32 வயதான சவுமியா என்பவரே கொல்லப்பட்டவர்.
இஸ்ரேலில் செவிலியராக பணியாற்றிவரும் சவுமியா, சம்பவத்தின் போது கணவர் சந்தோஷுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் மீது ரொக்கெட் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சவுமியா மரணமடைந்த தகவல், இஸ்ரேலில் பணியாற்றும் இன்னொரு உறவினரே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியே மக்களின் மரண ஓலங்கள் கேட்பதாகவும், தொடர்ந்து குண்டு மழை பொழிந்தவண்ணம் உள்ளதாகவும் சவுமியா தமது கணவரிடம் கூறியுள்ளார்.
மட்டுமின்றி தமக்கு பயமாக இருப்பதாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். தாம் கவனித்துவரும் முதாட்டியுடன் பாதுகாப்பு தேடி, பதுங்கு குழிக்கு செல்ல இருப்பதாகவும், இனி எப்போது தொடர்பு கொள்ள முடியும் என தெரியவில்லை எனவும் சவுமியா கணவர் சந்தோஷிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பலத்த சத்தமுடன் சவுமியா வசிக்கும் குடியிருப்பில் ரொக்கெட் பதிந்ததாகவும், தொடர்ந்து கடும் புகை மூட்டம் எழுந்தது மட்டுமே கடைசியாக சந்தோஷ் தமது மொபைல் வீடியோ அழைப்பில் கண்டுள்ளார்.
இதனையடுத்து அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பல முறை திரும்ப முயற்சித்தும் மனைவியை தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சந்தோஷின் சகோதரி ஷெர்லி என்பவர் அஷ்கெலோன் பகுதியில் இருந்து அழைத்துள்ளார்.
அவரே சவுமியா உள்ளிட்ட 38 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியவர்.
சவுமியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கேரளா வந்து சென்றுள்ளார். இந்த ஆண்டு ஊருக்கு திரும்புவதாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.