கந்தகார் விமான நிலையம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ள நிலையில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் கந்தகாரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதே ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தது மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு ஏவுகணைகள் விமான ஓடுதளத்தில் விழுந்ததாக விமான நிலைய அதிகாரி Massoud Pashtun தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிலைமை சீரானதும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும், ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான ஓடுதளம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை முன்னெடுக்க கந்தகார் விமான நிலையம் பயன்படுத்தப்படுவதாலையே, தற்போது தாக்குதலுக்கு இலக்கானதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கந்தகார் நகரை தலிபான்கள் தங்களின் தற்காலிக தலைநகராக மாற்ற முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.