ரோகித் சர்மா அணியில் நீடிப்பாரா? ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை வெளியேறிய நிலையில் சூசகமாக அவர் பேசிய வார்த்தைகள்
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறிய நிலையில் அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் 235 ரன்கள் குவித்து போட்டியை வென்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
இந்நிலையில் மும்பை போன்ற பிரான்சைஸீக்கு ஆடுவது என்றால் சாதாரணமல்ல என்று நிர்வாகம் பற்றி ஒரு கருத்தை ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார். அதாவது பிரஷர் தான் என்று கூறாமல் பிரஷரையே வேறொரு வார்த்தையில் சமத்காரமாக ‘எதிர்பார்ப்பு’ அதிகம் என்று சொல் மாற்றம் செய்து கூறினாலும் மும்பை பிரான்சைஸீக்கு ஆடுவது பிரஷர் தான் என்பதை சூசகமாகவே தெரிவித்ததாக பல ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் பிரான்சைஸீயை நினைத்து பெருமைப்படுகிறோம், என்ன உருவாக்கி வைத்துள்ளோமோ அதை நினைத்து சந்தோஷப்படுகிறோம் என்ற ரீதியில் ரோகித் சர்மா பேசியிருப்பது, அடுத்த ஏலத்தில் ஒருவேளை அணி மாறுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், மும்பை போன்ற பிரான்சைஸீக்கு ஆடும்போது எப்போதும் நன்றாக ஆடித்தீர வேண்டும், இதை நான் பிரஷர் - அழுத்தம் என்று கூற மாட்டேன். அனைத்திற்கும் மேலாக எதிர்பார்ப்பு என்றே கூறுவேன்.
கடந்த 5-6 ஆண்டுகளாக ஒரு குழுவாக உருவாக்கிய விஷயம் அபாரமானது. சில வீரர்களை ட்ராப் செய்வது கடினம். இந்த சீசனில் தொடக்கத்தில் நன்றாக ஆடினோம், வெற்றிகளைப் பெற்றோம்.
மிகவும் கேளிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ரசிகர்கள் எங்கள் அணியின் 12வது வீரர் ஆவார்கள், எப்போதும் எங்கள் அணிக்குத் துணையாக நின்றார்கள், பிளே ஆஃப் செல்லாதது சிறிய ஏமாற்றம்தான்.