கொஞ்சம் அசால்டாக விளையாடிய ஆர்சிபி; கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமயிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, ஜேசன் ராய் 44 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 31 ஓட்டங்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 141 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு அந்த அணியின் கேப்டனான விராட் கோலி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த டேனியல் கிரிஸ்டியன் (1) , ஸ்ரீகர் பரத் (12) ஆகியோர் சொதப்பினாலும், 4வது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த மேக்ஸ்வெல் – தேவ்தட் படிக்கல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கேன் வில்லியம்சனின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட்டானார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தட் படிக்கல் 41 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்ததால், பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவருக்கு 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன டிவில்லியர்ஸ் களத்தில் இருந்ததால், பெங்களூர் அணி அசால்டாக வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.