அரச குடும்பம் மீது கடும் விமர்சனம்... சட்டத்தரணி ஒருவரின் தண்டனைக் காலம் மேலும் அதிகரிப்பு
அரச குடும்பத்தை மோசமாக விமர்சித்ததாக கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளரின் தண்டனைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரச குடும்பத்தை விமர்சித்ததாக
தாய்லாந்தில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான 39 வயதான Arnon Nampa அரச குடும்பத்தை விமர்சித்ததாக குறிப்பிட்டு, சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் தண்டனையும் 2.70 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் அரசியல் பேரணி ஒன்றில் உரை நிகழ்த்தியதற்காகவும், தாய்லாந்தின் அரச குடும்பத்தை அவமதிப்பு செய்ததாகவும், அவசரகால ஆணையை மீறியமை மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தாம் இதுவரை சட்டத்தை மீறியதில்லை என்று Arnon கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அரச குடும்பத்து அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக அர்னான் தற்போது எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். 2020ல் அரசியல் பேரணி ஒன்றில் உரை நிகழ்த்தியதற்கும், இன்னொன்று 2021ல் அரச குடும்பத்திற்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகக் கடினமானது
2023 செப்டம்பர் மாதத்தில் இருந்தே அர்னான் சிறையில் உள்ளார். தற்போது மேலும் 2 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மொத்தமாக அவர் 10 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் lese-majeste சட்டம் என்பது உலகிலேயே மிகக் கடினமானது என்றே கூறப்படுகிறது. அரச குடும்பத்திற்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
திங்களன்று வெளியான தீர்ப்பானது, அர்னான் மீதான 14 வழக்குகளில் 3வது தீர்ப்பாகும். கடந்த 2020ல் இருந்து அரச குடும்பத்தை மோசமாக விமர்சித்தவர்கள் என 272 பேர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |