ஐரோப்பிய மக்களை திட்டமிட்டே துன்புறுத்தும் ரஷ்யா... குளிர்காலம் கடினமாக இருக்கும்
ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவின் அளவை மீண்டும் குறைத்து அங்குள்ள மக்களின் வாழ்க்கையோடு ரஷ்யா விளையாடுவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயு அளவில் மீண்டும் 20% அளவுக்கு குறைப்பதாக ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது. மேலும், டர்பைனில் பராமரிப்பு வேலைகளை முன்னெடுப்பதை அனுமதிக்கவே இந்த நடவடிக்கை எனவும் விளக்கமளித்துள்ளது.
ஆனால் எரிவாயு வழங்கலை குறைக்க எந்த தொழில்நுட்ப காரணமும் இல்லை என்று ஜேர்மனி கூறியுள்ளது. ஏற்கனவே எரிவாயு வழங்கும் அளவை குறைத்துள்ள ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க அதிக அழுத்தம் கொடுப்பதாகவே கூறப்படுகிறது.
ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கி வந்த Nord Stream 1 பராமரிப்பு காரணங்களுக்காக 10 நாட்கள் மூடப்பட்டது. அதன் பின்னர் எரிவாயு வழங்கலை மீண்டும் துவங்கிய ரஷ்யா அளவை குறைத்தது. ஆனால் தற்போது மீண்டும் அந்த அளவில் கை வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடுமையாக விமர்சித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, எரிவாயு வழங்கல் தொடர்பில் மொத்த ஐரோப்பாவையே ரஷ்யா அச்சுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை கடினமாக்க ரஷ்யா வேண்டுமென்றே முயன்று வருவதாக தெரிவித்தார். மட்டுமின்றி, ஐரோப்பாவிலேயே பொருளாதாரத்தில் முதன்மை நாடான ஜேர்மனி தற்போது எரிவாயு வழங்களில் கட்டுப்பாடு வைத்துள்ளது என்பது மிக மோசமான நிலை என்றார்.
இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் எரிவாயு பயன்பாட்டை 15% வரையில் குறைக்க ஐரோப்பிய அமைச்சர்கள் திட்டமொன்றை வகுத்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு 27 உறுப்பு நாடுகளும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்காலம் நெருங்கி வருகிறது, எரிவாயு சிக்கனம் அல்லது பற்றாக்குறையால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார் செக் குடியரசு தொழில்துறை அமைச்சர் ஜோசப் சிகேலா.