எதிர்பார்த்ததுபோலவே நடந்துவிட்டது: ஜேர்மனிக்கு வழங்கப்பட்டுவந்த எரிவாயுவை முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா
எதிர்பார்த்ததுபோலவே ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயுவை முற்றிலும் நிறுத்திவிட்டது ரஷ்யா.
ஆனால், பராமரிப்புப் பணிகளுக்குப் பின் எரிவாயு விநியோகம் மீண்டும் துவங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom, குழாய் மூலம் ஜேர்மனிக்கு வரும் எரிவாயுவை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
ஜேர்மனிக்கு Nord Stream 1 என்னும் திட்டத்தின் கீழ் எரிவாயுவை விநியோகித்துவந்தது ரஷ்ய நிறுவனமான Gazprom.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதிக்க, எரிச்சலடைந்த ரஷ்யா, பல காரணங்கள் கூறி, ஐரோப்பாவுக்கு வழங்கப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கத் துவங்கியது.
ஜேர்மனிக்கு அனுப்பும் எரிவாயுவின் அளவைக் குறைத்துக்கொண்டே வந்த அந்நிறுவனம், கடைசியாக, குழாய் மூலம் அனுப்ப இயலும் எரிவாயுவில், 20 சதவிகிதத்தை மட்டுமே அனுப்பி வந்தது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் உள்ளதாகக் கூறி, மூன்று நாட்களுக்கு எரிவாயு வழங்கலை நிறுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது Gazprom நிறுவனம்.
ஆனால், எரிவாயு வழங்கலை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியுள்ள ரஷ்யா, இனி மீண்டும் எரிவாயு வழங்கலைத் தொடராது என ஜேர்மன் பொருளாதாரத் துறை அமைச்சர் அச்சம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், Gazprom நிறுவனம், ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயுவை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
ஆக, மீண்டும் ரஷ்யா எரிவாயு வழங்கலைத் தொடருமா என ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளரைக் கேட்டபோது, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் தவிர்த்து, எரிவாயு வழங்கலுக்கு எதுவும் இடையூறாக இல்லை, ஆகவே, நிச்சயம் எரிவாயு விநியோகம் மீண்டும் துவங்கும் என்று கூறியுள்ளார் அவர்.