ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு அழிவுகரமானது! ரஷ்யா கண்டனம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில் நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க முடிவை ரஷ்யா கண்டித்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
அதுமட்டுமின்றி, பிரித்தானியா, அமெரிக்கா, போலாந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளன.
இதனிடையே, வட கரோலினாவிலிருந்து போலந்து மற்றும் ஜேர்மனிக்கு 2,000 அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும், ஏற்கனவே ஜேர்மனியில் உள்ள மேலும் 1,000 பேர் ருமேனியாவுக்குச் செல்வார்கள் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முடிவு அழிவுகரமானது மற்றும் நியாயமற்ற நடவடிக்கை என ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Alexander Grushko தெரிவித்துள்ளார்.
இது உக்ரேனிய அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என Grushko தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முடிவு பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.