குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி
உக்ரைனின் மேற்குப் பகுதி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் கொடூர வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டெர்னோபில்(Ternopil) நகரின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்துள்ளனர்.
2022ம் ஆண்டு தொடங்கிய போர் நடவடிக்கைக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
மக்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்யா X-101 ரக குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கியதாக உக்ரைன் விமான படை உறுதிப்படுத்தியுள்ளது.
வான் பாதுகாப்பு வேண்டுகோள்
ரஷ்யாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் டெர்னோபில் நகரம் மட்டுமல்லாமல் லிவிவ், இவானோ-ஃப்ராங்கிவ்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா ஏவிய 476 ட்ரோன்களில் 442 ட்ரோன்களையும் மற்றும் 48 ஏவுகணைகளில் 41 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தி இருப்பதாக உக்ரைன் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு தாக்குதலுக்கு F-16 மற்றும் மிராஜ் 2000 போன்ற மேற்கத்திய நட்பு நாடுகளின் போர் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அதே சமயம் அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேற்கத்திய நட்பு நாடுகளிடம் இருந்து தடையற்ற மற்றும் சரியான நேரத்தில் விமான ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் உக்ரைன் விமானப்படை வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |