ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் அளித்த ரஷ்யா... இந்தமுறை 3 நாட்கள்
ஏற்கனவே தொடர்ந்து 10 நாடக்ள் பராமரிப்பு காரணமாக எரிவாயு வழங்கலை நிறுத்திய ரஷ்யா
நிச்சயமற்ற தன்மையை விதைத்து விலைகளை உயர்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை
ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்கிவரும் Nord Stream 1ஐ பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் மூன்று நாட்கள் நிறுத்த இருப்பதாக ரஷ்யாவின் Gazprom நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஜேர்மனியை இணைக்கும் குறித்த திட்டத்தின் வாயிலாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்கல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தொடர்ந்து 10 நாடக்ள் பராமரிப்பு காரணமாக எரிவாயு வழங்கலை நிறுத்திய ரஷ்யா, மீண்டும் எப்போது தொடரும் என கூற முடியாது என ஐரோப்பிய நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தியது.
ஆனால் பராமரிப்பு பணிகள் முடித்து எரிவாயு வழங்கலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா, தொழில்நுட்ப காரணங்களை குறிப்பிட்டு, எரிவாயு வழங்கல் அளவை குறைத்தது. இது ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடியாக அமைந்தது.
மட்டுமின்றி, எரிசக்தி பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர புதிய அவசர கால திட்டங்களையும் அமுலுக்கு கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜேர்மனியில் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
நினைவுச் சின்னங்கள் இருண்ட வெளிச்சத்தில் காட்சியளித்தது. இந்த நிலையில், தற்போது ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 2 வரையில் மீண்டும் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க இருப்பதாக Gazprom அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் நார்ட் ஸ்ட்ரீம் 1 அதன் முந்தைய அளவான 33 மில்லியன் கன மீற்றரில் மீண்டும் எரிவாயு வழங்கத் தொடங்கும் என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவே எரிவாயு வழங்கல் குறைக்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் உக்ரேனில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில் நிச்சயமற்ற தன்மையை விதைத்து விலைகளை உயர்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை என்று ஜேர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது மூன்று நாட்கள் எரிவாயு வழங்கல் ரத்தாகும் என ரஷ்யா அறிவித்துள்ளது, மொத்தமாக ரத்தாகும் சூழலும் உருவாகலாம் என அச்சம் எழுந்துள்ளது.