கொரோனாவால் திணறி வரும் உலக நாடுகள்! மற்றொரு தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா: புடின் சொன்ன வார்த்தை
கொரோனாவிற்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள ரஷ்யா, அதை விநியோகம் செய்து வரும் நிலையில், தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற பெயரில் மற்றொரு தடுப்பூசியையும் அந்நாடு உருவாக்கியுள்ளது.
கொரோனா பரவல் ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இப்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆசிய கண்டங்கள் மட்டுமின்றி, மேலும் பல நாடுகளில் இந்த கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உலகநாடுகளின் உதவியையும், தடுப்பூசியையுமே நம்பியுள்ளன. அதன் படி கொரோனாவில் இருந்து மீண்டு வரும் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய நாட்டின் தயாரிப்பான கொரோனா தொற்றுக்கு எதிராக 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்புட்னிக் லைட்' ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்கள் உடையவை. ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்படும் தடுப்பூசி என்ற பெருமை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிடைத்துள்ளது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பு மருந்து குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை. அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்