5,00,000 போர் வீரர்களின் புதிய அணிதிரட்டல்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சதி திட்டம்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ஈடுபடுத்த 5,00,000 வீரர்களை அணிதிரட்ட ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைனிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மீண்டும் அணி திரட்டல்
அக்டோபர் மாதம் 300,000 ரஷ்ய வீரர்கள் போராட அழைக்கப்பட்ட பின்னர், ஜனவரியில் கூடுதலாக 500,000 கட்டாய ஆட்களை அணி திரட்டுவதற்கு உத்தரவிட மாஸ்கோ தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் முதல் கட்ட அணிதிரட்டல் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியது, அத்துடன் ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் இராணுவ சேவைக்காக வலுக்கட்டாயமாக அழைக்கப்படுவார்கள் என்ற பயத்தில் தப்பி ஓடினார்கள்.
இந்நிலையில் ரஷ்யா வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் கூடுதலாக 5,00,000 ரஷ்ய வீரர்கள் படையில் சேர்க்க திட்டமிட்டு வருவதாகவும், இது புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உக்ரைனின் துணை இராணுவ புலனாய்வு தலைவர் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மறுப்பு
கூடுதல் ஆட்சேர்ப்பு படைகளால் மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் கிழக்கு மற்றும் தெற்கில் இருக்கும் என்று உக்ரைன் நம்புகிறது. அத்துடன் மேற்கத்திய முகமைகள் மீண்டும் மீண்டும் மாஸ்கோ "மறைமுக" அணிதிரட்டலைத் தொடர்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது.
Victor Berzkin/ZUMA
ஆனால் அணிதிரட்டலின் ஒரு புதிய அலைக்கு தயாராகி வருவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதற்கிடையில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் காலத்திற்காக அழைக்கப்பட்ட 36 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்யா உடைத்ததாக உக்ரைன் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.