உக்ரைன் போர்! ரஷ்யாவுடன் இணைப்பு: அரசாணையில் கையெழுத்திட்டார் விளாடிமிர் புடின்
உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பான அரசாணையில் புடின் கையெழுத்திட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்து நீடிக்கிறது.
ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படையினர் கைப்பற்றிய கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த வாரம் நடத்தப்பட்டது.
இதில், பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
AFP
இந்நிலையில், கிரெம்ளின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் கோலாகலமாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் இந்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார்.
அதில், `தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன், ஜபோர்ஜியா பகுதிகளின் இறையாண்மை, சுதந்திரத்தை அங்கீகரிக்க உத்தரவிடுகிறேன்,’ என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இது ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா.வும், உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பது சட்ட விரோதமான நில அபகரிப்பு என்று அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.