உக்ரைன்-ரஷ்யா போர்: பேச்சுவார்த்தை நடத்த தயார்., இறங்கிவரும் புடின்
போர் குறித்து உக்ரைன் உள்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 300 நாட்களுக்கு மேலாகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
10 மாதங்களாக நீடித்து வரும் போர்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் கிட்டத்தட்ட 10 மாதங்களாக நீடித்து வருகிறது.
ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, அமெரிக்கா சமீபத்தில் உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டொலர்கள் மதிப்பினான ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆனால்.,
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.