கிழக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தோல்வி... புடின் ஆதரவாளர் அறிவிப்பு
பிப்ரவரி மாதம், 24ஆம் திகதி, உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய நிலையில், நீண்ட நாட்கள் முயற்சிக்குப் பின்பும் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் ரஷ்யப் படைகளின் முயற்சி தோல்வியடைந்ததால், அவர்கள் முழுக்கவனமும் கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பகுதியை நோக்கி திரும்பியது.
டான்பாஸ் பகுதியையாவது எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என ரஷ்யப் படைகள் முழுமூச்சுடன் இறங்கிய நிலையில், அங்கும் அவர்களை ஓட ஓட விரட்டியுள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
ரஷ்யப் படைகளை உக்ரைன் வீரர்கள் ரஷ்ய எல்லைக்கே துரத்தியடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், புடின் ஆதரவாளர்களில் முக்கியமானவரான ஒருவர், கிழக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறை அலுவலரும், தளபதியுமான Igor Girkin என்பவர், சமூக ஊடகம் ஒன்றில், Donetsk பகுதியில் எதிரியை தோற்கடிக்கும் ஆபரேஷன் தோல்வியடைந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
டான்பாஸ் பகுதியை முழுமையாக விடுவிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ள அவர், இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், போரை தளபதிகள் நடத்துவதற்கு பதிலாக, புடின் நேரடியாக படைகளை கட்டுப்படுத்துவதாகவும், அதனால்தான் தோல்விகளை சந்திக்க நேரிடுகிறது என்றும் அதிகாரிகள் நம்பத் துவங்கிவிட்டார்கள்.
ரஷ்யப் படைகளுடன் அவர்களுடைய தளபதிகள் தொடர்பு கொள்வதற்கு உதவும் ரேடியோ கருவிகளை உக்ரைன் முடக்கிவிட்டதால், ரஷ்யத் தளபதிகள் உத்தரவுகளை வழங்குவதற்காக நேரடியாக போர் நடைபெறும் இடத்துக்கே செல்கிறார்கள்.
அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு உக்ரைன் வீரர்கள் ரஷ்ய தளபதிகளைக் கொன்றுவிடுகிறார்கள்.
உக்ரைன் படைகளால் கொல்லப்பட்ட ரஷ்ய தளபதிகளின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.