சொந்த இராணுவத்தினரை கொன்று குவித்து... ரஷ்யா போடும் கொடூர திட்டம்: அம்பலமாகும் இரகசியம்
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முக்கிய காரணத்தை உருவாக்க ரஷ்யா கொடூர திட்டமொன்றை முயற்சிக்கலாம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறும் அமெரிக்கா, கிழக்கு உக்ரைனில் அவ்வாறான ஒரு நாடகத்திற்கு சில குழுக்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பினூடே வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கியுள்ளார்.
ரஷ்யா அனுப்பியுள்ள அந்த குழுக்கள் உள்ளூர் கலவரங்களை மூட்டுவதில் பயிற்சி பெற்றவர்கள் எனவும், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் ரகசியமாக ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக நாசவேலைகளை மேற்கொள்வார்கள் எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டுமின்றி, குறித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவால் மட்டுமே முடியும் என்பது போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் சமூக ஊடகம் ஊடாக மக்களில் பரப்புவார்கள் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்க முடிவெடுத்திருக்கும் ஜனவரி மத்தியில் அல்லது பிப்ரவரி மத்தியப்பகுதிக்கு முன்னர் குறித்த ரகசிய பிரிவினர் இந்த சதி வேலையில் ஈடுபடுவார்கள் எனவும் அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.
இவர்கள் ரஷ்ய துருப்புகளை எதிர் முனையில் இருந்து தாக்குவதால், உயிர் அபாயங்கள் ஏற்படும் எனவும், இதையே காரணமாக கொண்டு ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது தாக்குதல் முன்னெடுக்கும் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மக்களிடையே ரஷ்ய தேசபக்தியை ஊக்குவித்து, உக்ரை மீதான இராணுவ நடவடிக்கைக்கு நாட்டின் ஆதரவை கைப்பற்றவும் இந்த ரகசிய குழுவினர் திட்டங்கள் முன்னெடுப்பார்கள் என அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ரஷ்ய மொழியில் வெளியாகும் பதிவுகளின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளதையும் அமெரிக்க வெள்ளைமாளிகை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.