பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம்
ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
ஆண் கைதிகளை
ரஷ்ய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்பிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பும், தங்களை அவமானப்படுத்தவும் மனரீதியாக துன்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிறப்புறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடுமைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மற்றும் உக்ரேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஐ.நா. விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில்,
ரஷ்யா 2022-ல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அதன் இராணுவப் படைகள் உக்ரேனிய ஆண் கைதிகளை முதன்மையாகப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் உக்ரேனியப் போர் கைதியான Serhii Boychuk தெரிவிக்கையில், 2022-இல் ரஷ்யர்கள் அவரைச் சிறைபிடித்ததாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் ரஷ்யக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது 33 வயதாகும் அவர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், தனது பிறப்புறுப்பின் மீது கத்தி வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
அவர்கள் ஒரு நபரை அவமானப்படுத்தவும் மனதளவில் சிதைக்கவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று, அக்டோபர் 2024-இல் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார்.
உக்ரைனின் முன்னாள் போர்க்கைதிகளில் மற்றொருவரும், ரஷ்யாவின் போர்க்கைதிகள் முகாம்களில் இருந்தபோது பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளான இதே போன்ற அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

இந்த நிலையில், இதுவரை விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டத் தகவல்களின் அடிப்படையில், போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பாலியல் வன்முறைகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வந்துள்ளதும்; இவை பெரும்பாலும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதும் விசாரணை அதிகாரிகள் குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரின்போது பொதுமக்களை அடக்கி ஒடுக்கவும் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவும் எதிரிப் படைகள் நீண்ட காலமாகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.
உள்நோக்கம் கொண்டவை
இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் மற்றும் சிறார்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய விசாரணைகளின் அடிப்படையில்,
2022-இல் ரஷ்யா தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியபோது, ரஷ்யப் படைகள் உக்ரேனியப் பெண்களையும் குறிவைத்துள்ளன.

இருப்பினும், போர் தற்போது இரு தரப்பினரின் வளங்களையும் படிப்படியாகச் சிதைக்கும் வகையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய ஆண் வீரர்களே பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, போரின்போது ரஷ்யப் படைகளால் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு விசாரணையில் உள்ள 310 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 280 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் சிறுமிகள் என்றே தெரியவருகிறது.

பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறப்புறுப்பு சிதைப்பு, மின் அதிர்ச்சி மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதை உத்திகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி, ரஷ்யா ஏற்கனவே அவற்றை மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |