"உண்மையாகவே நம்பமுடியவில்லை" ரஷ்ய தேர்தலில் புடின் வெற்றி பெற்றதில் மோசடி - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ள நிலையில், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ஆம் திகதி தொடங்கி திக்கட்கிழமை முடிவடைந்தது.
திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, யுனைடட் ரஷ்யா கட்சி முன்னிலை வகித்தது. 450 இடங்களில் 315 இடங்களைக் கைப்பற்றியது.
கடந்த 2016 தேர்தலில் 54.2 சதவீத வாக்குகளுடன் மொத்தம் 334 இடங்களைப் பெற்றிருந்த யுனைடெட் ரஷ்யா கட்சிக்கு இது சிறிய சறுக்கல் என்றாலும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.
அரசு நடத்தும் கருத்துக் கணிப்பாளர்களின் கணிப்புகள் கூட, யுனைடெட் ரஷ்யா சுமார் 30 சதவிகிதத்தை மட்டுமே வெல்லும் என்று பரிந்துரைத்தது. இந்த நிலையில், அக்கட்சி பெரும்பான்மையை வென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, "இந்த தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை. 2011-ல் தேர்தலில் மோசடி செய்தது போல் இப்போதும் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
2011 தேர்தலில் மோசடி நடந்ததாக போராட்டம் நடத்தியதற்காகவே அலெக்ஸி கைது செய்யப்பட்டார்.
Picture: Yuri Kochetkov/EPA
தேர்தலுக்கு முன்னதாக நாவல்னியின் அமைப்புகள் அனைத்தும் "தீவிரவாதிகள்" என தடைசெய்யப்பட்டன. அதன் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் (68) இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் நிலையில், நடப்பு அரசியல் நிலவரத்தைப் பார்க்கும் போது வேறு யாரையும் நம்பிக்கைக்குரியவராகப் பார்க்க முடியவில்லை, அதனாலேயே புதின் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சில வாக்காளர்கள் கூறியுள்ளனர்.