உரிய பதிலடி உறுதி... உக்ரைன் தாக்குதலுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
ரஷ்ய மின் நிலையங்கள் மீதான உக்ரைன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி அளிக்கும் உரிமையை ரஷ்யா கொண்டுள்ளது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனும்
உக்ரைன் துருப்புக்கள் பின்வாங்கி வரும் எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்ய எரிவாயு பம்பிங் நிலையத்தை வெடிக்கச் செய்ததாக ரஷ்யாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று வருடமாக நீளும் போரில் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யா மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது, பதிலுக்கு ரஷ்யாவின் எரிசக்தி வசதிகளை உக்ரைனும் தாக்கியுள்ளது.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உக்ரைன் போர் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க கடுமையாக போராடி வருகிறது. இதில் உக்ரைன் தரப்பு ஒப்புதல் அளித்துள்ள போதும், இதுவரை ரஷ்யா பதில் கூறாமல், ட்ரம்புக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீர்குலைக்கும் நடவடிக்கை
ரஷ்யா உடன் நெருக்கமான உறவை உருவாக்க முயன்று வரும் ட்ரம்ப் நிர்வாகம், ஜனாதிபதி புடினின் மெத்தனத்தை கேள்வி கேட்க முடியாமல் திணறி வருகிறது. ஆனால் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கேள்விகளால் துளைத்து அவமானப்படுத்தும் அச்சுறுத்தும் செயலை ஜனாதிபதி ட்ரம்பும் அவரது முதன்மையான அமைச்சர்களும் நடத்தினர்.
அத்துடன் உக்ரைனுக்கு நெருக்கடி அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதே நடவடிக்கைகளை ரஷ்யா மீது ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுக்க தயங்கி வருகிறது.
தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதுடன், உக்ரைன் மீது அப்பட்டமாக புகார் கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |