அம்பலமான மிகப்பெரிய கொள்ளை... பல மில்லியன் தொகையுடன் நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய பெண்
ரஷ்யாவில் தாம் பணியாற்றிய வங்கியில் இருந்து 7 மில்லியன் பவுண்டுகள் தொகையுடன் வெளிநாட்டுக்கு தப்பிய பெண் ஒருவர் தற்போது விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
சைபீரியன் வங்கி ஒன்றில் பணியாற்றிய Inessa Brandenburg என்பவர் கடந்த 2018 ஜனவரி மாதம் கொள்ளையிட்ட 7 மில்லியன் பவுண்டுகள் தொகையுடன் தனியார் விமானத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் சென்றார்.
அங்கேயே அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இதனிடையே வங்கி பெட்டகத்தில் இருந்து 561 மில்லியன் ரூபிள் தொகை மாயமாகியுள்ளது ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெட்டகத்தில் பணத்திற்கு பதிலாக எழுது பொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட, தனியார் விமானத்தில் Inessa Brandenburg மாஸ்கோ பயணப்பட்டதும் அங்கிருந்து ஜேர்மனிக்கு தப்பியதும் தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் ஸ்பெயின் நாட்டில் குடியிருப்பது கண்டுபிடிக்கப்பட, தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையை எதிர்கொள்ள அவர் ரஷ்யா திரும்ப உள்ளார்.
நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளையாக கருதப்படும் இந்த வழக்கில் Inessa Brandenburg-ன் நெருங்கிய நண்பரே முதல் குற்றவாளி என கூறப்படுகிறது. அவரே, திட்டமிட்டு Inessa Brandenburg-வை வங்கியின் இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
இதனால் வங்கியின் முழு கட்டுப்பாடும் Inessa Brandenburg வசம் இருந்தது. சம்பவத்தன்று 9 பைகளில் நிரப்பிய தொகையை உதவியாளர் ஒருவரால் வங்கிக்கு வெளியே மாற்றப்பட்டது.
தொடர்ந்து தலைநகர் மாஸ்கோவுக்கும், அங்கிருந்து பெர்லின் நகருக்கும் Inessa Brandenburg தப்பிச் சென்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்பெயின் அதிகாரிகளால் Inessa Brandenburg கைது செய்யப்பட, ஜூலை 29 வெள்ளிக்கிழமை மாட்ரிட் அதிகாரிகளால் ரஷ்ய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.