உக்ரைன் போரை விமர்சித்து ரூ 80,000 கோடியை இழந்த ரஷ்ய கோடீஸ்வரர்
உக்ரைன் போரை விமர்சித்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு காரணமாக, ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவருக்கு ரூ 80,915 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பைத்தியக்காரத்தனம்
ரஷ்யாவில் பல வங்கிகளுக்கு உரிமையாளரான ஒலெக் டின்கோவ் என்பவரே, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவால் 9 பில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ 80,915 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

பொதுவெளியில் விமர்சனம் முன்வைத்தப் பிறகு, தனது வங்கியின் பங்குகளை அதன் உண்மையான மதிப்பில் மிகவும் குறைந்த விலைக்கு விற்குமாறு தான் வற்புறுத்தப்பட்டதாக டின்கோவ் தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டில் ஒரு பிணைக்கைதி போன்ற நிலைமையை அப்போது எதிர்கொண்டதாக அவர் விவரித்தார். விளாடிமிர் புடினின் ரஷ்யாவில், குறிப்பாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு மத்தியில் எழும் விமர்சனங்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றன என்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவில் Tinkoff வங்கி நிறுவனரான Oleg Tinkov ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கோடீஸ்வர வங்கியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இருப்பினும், ஏப்ரல் 2022-ல் அவர் இன்ஸ்டாகிராமில் உக்ரைன் போரை வெளிப்படையாகக் கண்டித்தபோது அந்த நிலை மாறியது. உக்ரைனுக்கு எதிரான போரை பைத்தியக்காரத்தனம் என்று கூறியதுடன், ரஷ்ய இராணுவத்தை ஊழல் நிறைந்ததாகவும், போருக்குத் தயாரற்றது எனவும் விமர்சித்தார்.

மட்டுமின்றி, 90 சதவீத ரஷ்ய மக்கள் போருக்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிட்டார். மேற்கத்திய நாடுகள் உடனடியாக தலையிட்டு, புடினை வெளியேற்றி இந்தப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
எல்லாவற்றையும் இழப்பது
இதன் அடுத்த நாள் ரஷ்ய உயரதிகாரிகள் Tinkoff வங்கி நிர்வாகிகளை தொடர்புகொண்டு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, Tinkovன் பங்குகள் விற்கப்பட்டு, அந்த பிராண்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட வேண்டும், அல்லது அரசாங்கம் அந்த வங்கியை நாட்டுடைமையாக்கும்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பிறகு, டின்காஃப் வங்கியில் தனக்கிருந்த 35% பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும்படி தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக டின்கோவ் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் அனுமதிக்கப்படவில்லை, மேலும் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது அல்லது எல்லாவற்றையும் இழப்பது என்ற இரண்டு வழிகளில் ஒன்றை அவர் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஒரு வாரத்திற்குப் பிறகு, ரஷ்யாவின் மிகப் பெரிய பணக்காரர்களுடன் தொடர்புடைய ஒரு நிறுவனம், அவரது பங்குகளை அதன் உண்மையான மதிப்பில் வெறும் 3% விலைக்கு வாங்கியது, இதனால் அவருக்கு 9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
தனது பங்குகளை விற்ற பிறகு, டின்கோவ் ரஷ்யாவை விட்டு வெளியேறினார், மேலும் தனது குடியுரிமையையும் துறந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |