மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய மற்றும் சீன அணு ஆயுத விமானங்களால் பரபரப்பு
அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்ட ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த விடயம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீறிப்பாய்ந்த தென் கொரிய போர் விமானங்கள்
ஆறு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தென் கொரிய எல்லைக்குள் நுழைந்ததையடுத்து, தென் கொரிய இராணுவம் தனது போர் விமானங்களை அனுப்பவேண்டிய பதற்றமான சூழல் உருவாகியது.
நேற்று, சீன போர் விமானங்கள் கொரிய வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
சீன விமானங்கள் வெளியேறியதும், அணு ஆயுதம் வீசும் திறன் கொண்ட ரஷ்யப் போர் விமானங்கள் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.
ஆகவே, ஏதேனும் அசம்பாவிதம் நேரும் முன் அதைத் தவிர்க்கும் வகையில் தனது போர் விமானங்களை இராணுவம் அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
மற்றொரு நாட்டுக்குள்ளும் அத்து மீறி நுழைந்த விமானங்கள்
மேலும், அணு ஆயுதம் வீசும் திறன் கொண்ட சீன போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக ஜப்பானும் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை, அதாவது நேற்று காலை சீன போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள ஜப்பான் அதிகாரிகள், அதே நேரத்தில் இரண்டு ரஷ்ய போர் விமானங்களும் ஜப்பான் கடல் எல்லைக்குள் நுழைந்து பின் திரும்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில், அமெரிக்கா தனது ஆயுத பலத்தைக் காட்டும் வகையில் அணு ஆயுத விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஷ்யாவும் சீனாவும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது.