தங்கள் சொந்த நாட்டு வீரர்களையே ஈவிரக்கமின்றி கொல்லும் ரஷ்ய தளபதிகள்: பிடிபட்ட ரஷ்யப் படைவீரர்கள் வாயாலேயே வெளிவந்த உண்மை
ரஷ்ய தளபதிகள், காயம்பட்ட தங்கள் படைவீரர்களுக்கு உதவாமல், அவர்களைக் கொல்வதாக, பிடிபட்ட ரஷ்யப் படைவீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்ய தளபதிகளில் lieutenant-colonel பதவியிலிருக்கும் ஒருவர் அப்படி பல ரஷ்யப் படைவீரர்களைக் கொன்றுள்ளதாக உக்ரைனிடம் பிடிபட்ட ரஷ்யப் படைவீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காயம்பட்ட ஒரு படைவீரரிடம், உன்னால் நடக்க முடியுமா என அந்த தளபதி கேட்டாராம். அவர் தன்னால் நடக்க முடியாது என்று கூறவும், உடனே அந்தப் படைவீரரை சுட்டுக் கொன்றுவிட்டாராம் அந்த தளபதி.
காயம்பட்ட அந்த படைவீரர்களை மீட்டு உதவி அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டார் என்கிறார் ஒரு ரஷ்யப் படைவீரர்.
இப்படி ஒருவர் இரண்டு பேர் அல்ல, பலரை அந்த தளபதி சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் அந்த ரஷ்யப் படைவீரர்கள்.
இந்த விடயங்களை வெளியிட்டுள்ளவர்கள், உக்ரைனிடம் பிடிபட்ட இளம் இராணுவ உளவுப் படையினர் ஆவர்.
தங்களைப் போலவே இளைஞர்களான படைவீரர்கள் கொல்லப்பட்டதால் துயரமடைந்துள்ள அந்த ரஷ்ய இளைஞர்களில் ஒருவர், தளபதிகள் காயம்பட்ட வீரர்களை முடித்து விட்டதாக தெரிவிக்கிறார். அப்படி என்றால் என்ன பொருள் என்று அவரிடம் கேட்க, அதாவது தளபதிகள் காயம்பட்ட படைவீரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக அவர் தெரிவிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த வீடியோ உக்ரைனின் எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.