பிரித்தானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்கள்... வழிமறித்த பிரித்தானிய போர் விமானங்கள்: பரபரப்பாகும் ஐரோப்பா
பிரித்தானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்கள் இரண்டை பிரித்தானிய போர் விமானங்கள் வழிமறிப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தன் நட்பு நாடான பெலாரஸ் வழியாக போலந்து நாட்டு எல்லைக்கு புலம்பெயர்வோரை அனுப்பி குழப்பம் விளைவித்தும், உக்ரைன் எல்லையில் போர்த்தளவாடங்களைக் குவித்தும் ஒருவிதமான போர்ப்பதற்றத்தை உருவாக்கி வருகிறது ரஷ்யா.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ரஷ்யாவுக்குச் சொந்தமான அணுகுண்டு வீசும் விமானங்கள் இரண்டு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக, பிரித்தானிய போர் விமானங்கள் இரண்டு அந்த ரஷ்ய விமானங்களை வழிமறித்து, பிரித்தானிய எல்லைக்கு வெளியே கொண்டு விட்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் பிரித்தானிய போர் விமானங்களும், அமெரிக்க குண்டு வீசும் விமானங்களும் இணைந்து தங்கள் வலிமையைக் காட்டும் வகையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
அது ரஷ்ய அதிபர் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தவே, அவர், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளிலுள்ள அதன் கூட்டாளிகளும் கருங்கடல் பகுதியில் திட்டமிடப்படாத போர் ஒத்திகையில் ஈடுபட்டுவருகின்றன. இது எங்களுக்கு பெரிய சவால் என்று கூறியுள்ளார்.
மேலும், பெலாரஸ் எல்லையில் காணப்படும் புலம்பெயர்வோர் பிரச்சினை குறித்து பேசிய புடின், ’நான் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புவது என்னவென்றால், அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.
முழுப்பூசணிக்காயை யாரோ சோற்றில் மறைத்துவைக்கப் பார்த்ததாக ஒரு பழமொழி உண்டு... புடின் கூறுவதைப் பார்த்தால் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.