அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை
உக்ரைனின் தொழில் நகரமான டான்பாஸ் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உக்ரைனின் தொழில் நகரமான டான்பாஸ் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் இழப்பீடுகளை செலுத்த ரஷ்ய கோடீஸ்வரர்களை ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கார்கிவ் பகுதியை ரஷ்ய துருப்புகளிடம் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் துருப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, டான்பாஸ் தொழில்நகரம் மீது தாக்குதல் முன்னெடுத்திருப்பது அழுத்தத்தை அதிகரிக்கவே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டான்பாஸ் நகரம் முற்றாக சிதைக்கப்பட்டிருப்பது நரகம் போன்று காட்சியளிப்பதாகவும் ஆனால் இது உண்மையில் மிகைப்படுத்தப்பட்டது அல்ல எனவும் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், போருக்குப் பிறகு உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு நிதி திரட்டும் பொருட்டு ரஷ்ய கோடீஸ்வரர்களின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதியுதவி அளிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக அதன் தலைவர் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்ய கோடீஸ்வர்களின் முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைன் மறுகட்டமைப்பிற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியமான வழிகளை ஐரோப்பிய ஒன்றிய சட்டதரணிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.