பெலாரஸ் பாணியில் லண்டன் விமானம் கடத்தப்படுமா? பத்திரிகையாளரின் கேள்விக்கு ரஷ்ய ஜனாதிபதியின் பதில்
அரசியல் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு லண்டன் விமானத்தை கடத்தும் நிலை ஏற்படுமா என்ற கேள்விக்கு, ரஷ்ய ஜனாதிபதி பதிலளிக்க மறுத்துள்ளார்.
ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் சார்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் ஜனாதிபதி புடின் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, பெலாரஸ் ஜனாதிபதி தமது அரசியல் எதிரியை கைது செய்ய பயணிகள் விமானம் ஒன்றை வலுக்கட்டாயமாக தரையிறக்கியதை சுட்டிக்காட்டியுள்ள ஊடகவியலாளர் ஒருவர்,
இதுபோன்ற சூழல் ரஷ்யாவுக்கு உருவானால், லண்டனில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் விமானத்தை ரஷ்யாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால் அந்த கேள்வி முழுமையடையும் முன்னரே, ரஷ்ய ஜனாதிபதி, அந்த கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த பதில், ஊடகவியலாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko தமது அரசு மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளரை வலுக்கட்டாயமாக பயணிகள் விமானத்தில் இருந்து கைது செய்தது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்,
பெலாரஸ் மீது ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இனிமேல் பறக்காது எனவும் முடிவு செய்யப்பட்டது. மட்டுமின்றி பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதார தடைகளும் விதிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.