ஹார்முஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மாலுமிகளில் பெரும்பாலோர் இந்த நாட்டவர்கள்
உலகளாவிய கடல்சார் ஊழியர்களில் சுமார் 12 சதவீதத்தினர் இந்தியர்கள் என்ற நிலையில், சமீபகாலமாக கடலில் நிலவும் ஆபத்துகளின் பெரும் பகுதியை இந்தியர்களே எதிர்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட மாலுமிகள்
வெளியாகியுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையில் நடத்தப்படும் தாக்குதலில் கொல்லப்பட்ட மாலுமிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றேத் தெரிய வருகிறது.

மார்ச் 1 முதல் ஜூலை 14, 2026 வரையிலான காலகட்டத்தில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட 16 மாலுமிகளில் 7 பேர் (சுமார் 44 சதவீதம்) இந்தியர்கள் என்றே தெரிய வருகிறது.
மட்டுமின்றி, 2025-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கப்பல் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட மாலுமிகளில் 18 சதவீதம் பேர் இந்தியர்களாக இருந்தனர்; இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இப்பாதிப்புக்குள்ளானவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஜூன் 8 மற்றும் ஜூன் 11 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், MT Marivex, MT Settebello மற்றும் MT Jalveer ஆகிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்தியக் கப்பல் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரான் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதல்களில் மேலும் நால்வர் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி, இந்தத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான பிற இந்தியக் கப்பல் ஊழியர்களையும் ஆபத்தில் தள்ளியது.
ஹார்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் தங்கள் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, 180-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தியக் கடல்சார் ஊழியர்களைப் பொறுத்தவரை, ஏவுகணைகள் மற்றும் கடல்சார் மோதல்கள் மட்டுமே ஆபத்துகள் அல்ல; கப்பல் உரிமையாளர்களால் கைவிடப்படும் சூழலையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
கைவிடப்பட்டவர்கள்
இதனால், ஊதியம், அத்தியாவசியப் பொருட்கள் அல்லது தாயகம் திரும்பும் வழிவகை ஏதுமின்றி அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுத் துறைமுகங்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
கடல்சார் தொழிலாளர் விதிகளின் அடிப்படையில், ஒரு மாலுமியைக் கப்பல் உரிமையாளர் அவரது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பத் தவறினாலோ, அத்தியாவசிய ஆதரவை வழங்கத் தவறினாலோ, அல்லது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்கத் தவறினாலோ, அவர் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.

சர்வதேச போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பின் (International Transport Workers' Federation) தரவுகளின் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் கைவிடப்பட்ட சூழலால் அதிகம் பாதிக்கப்பட்ட நட்டவர்கள் இந்தியர்களே.
2025-ஆம் ஆண்டில் 1,125 இந்தியக் கடல்சார் பணியாளர்கள் கைவிடப்பட்டனர்; இது உலகம் முழுவதும் கைவிடப்பட்ட 6,223 கடல்சார் பணியாளர்களில் சுமார் 18 சதவீதமாகும்.
கைவிடப்பட்ட மாலுமிகளின் எண்ணிக்கையில் 539 பேர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சிரியா நாட்டினர் 309 பேர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, உலகளாவிய மாலுமிப் பணியாளர்களில் சுமார் 12 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |