நூடுல்ஸில் நோய்க்கிருமிகள்... 14 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஒன்றின் மூலம் நோய்க்கிருமிகள் பரவியதில், பிரித்தானியா உட்பட 14 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நூடுல்ஸில் நோய்க்கிருமிகள்...
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஒன்றில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருந்ததால், அதனை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களும் இளைஞர்களும்தான்.

இந்த தகவலை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி வெளியிட்டுள்ள நிலையில், அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பான நூடுல்ஸ் என அந்த ஏஜன்சி தெரிவிக்கவில்லை.
ஆனால், கடந்த வாரம், உக்ரைனை மையமாகக் கொண்டு செயல்படும் Euro Food Service என்னும் நிறுவனத் தயாரிப்பான Reeva நூடுல்ஸில் சால்மோனெல்லா கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
14 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
விடயம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நூடுல்ஸால் பிரித்தானியா உட்பட 14 நாடுகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரித்தானியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, லாத்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளே பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட நூடுல்ஸை வாங்கியவர்கள் அதை பயன்படுத்தவேண்டாம் என்றும், அதை தூர எறிந்துவிடவோ அல்லது வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்துவிடவோ அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த சால்மோனெல்லா கிருமிகளால் பாதிக்கப்பட்டால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.
குறிப்பாக, சிறு பிள்ளைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மோசமாக மாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |