ஈரான் அதை கடைப்பிடிக்காத வரை பொருளாதார தடையை நீக்கமுடியாது: ஜோ பைடன் திட்டவட்டம்
அணு சக்தி ஒப்பந்த விதிகளை கடைப்பிடிக்காதவரை ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்காது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விளகியதோடு, மே 2018 முதல் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இதனால் அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் 2019 மே முதல் அதன் சில JCPOA ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விதிமுறைகளை படிப்படியாக கைவிட்டது.
அமெரிக்காவுக்கு மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யத் தொடங்குவதாக ஈரான் கடந்த மாதம் கூறியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பைடனிடம், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அமெரிக்கா முதலில் பொருளாதாரத் தடைகளை நீக்குமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு உறுதியாக பதிலளித்த பைடன், அணு சக்தி ஒப்பந்த விதிகளை கடைப்பிடிக்காதவரை ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா தான் ஒப்பந்தத்திலிருந்து விலக்கியதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், பொருளாதார தடைகளை முதலில் நீக்கினால் தான் தெஹ்ரான் மீண்டும் ஒப்பந்தத்துக்கு ஒத்துவரும் என கூறிவருகிறது.