குழந்தையின் கண்ணில் பீய்ச்சியடித்த சானிட்டைசரால் கருவிழிப்படலம் பாதிப்பு! பெற்றோர்கள் உஷார்!!
அபுதாபியில் ஹேண்ட் சானிட்டைசர் எந்திரத்தை அழுத்தியபோது, சிறுமியின் கண்ணில் பீய்ச்சியடித்த சானிட்டைசரால் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து, குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அபுதாபியில் வசிக்கும் 4 வயது சிறுமி தனது பெற்றோருடன் வணிக வளாக பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பொதுவான இடத்தில் காலில் அழுத்தினால் கையில் சானிட்டைசர் ஜெல் விழுவது போன்ற எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது.
அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அந்த சிறுமி ஓடிச்சென்று காலால் அந்த எந்திரத்தை அழுத்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் இருந்து சானிட்டைசர் ஜெல் அந்த சிறுமியின் கண்ணில் பீய்ச்சியடித்தது.
கண்ணில் தீ விழுந்தது போன்று கடும் எரிச்சல், வலி காரணமாக சிறுமி அலறி துடித்துள்ளார். அவரது பெற்றோர் உடனடியாக கண்ணில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.
ஆனால் கண் மிகவும் பாதிப்படைந்ததை அவர்களால் உணர முடிந்தது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் கருவிழிப்படலம் (Cornea) மிகவும் பாதிப்படைந்ததாக தெரிவித்தனர்.
சானிட்டைசரில் உள்ள ஆல்கஹால் மற்றும் ரசாயனங்கள் காரணமாக கண் புண்ணாகி இருந்தது. தற்போது ஓரளவு அதன் பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள எந்திரங்களில் சானிட்டைசர் விழும் பகுதி பெரியவர்களுக்கு கைகள் உள்ள உயரத்திலும், சிறுவர்களுக்கு கண்ணில் படும் உயரத்திலும் உள்ளது. எனவே இந்த பகுதிகளில் அவர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் சானிட்டைசர் போன்ற ரசாயன கலவைகளை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறுவர்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.