தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்த சவுதி அரபியா! எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவிப்பு
இஸ்லாமியக் கருத்துக்களை அந்தச் சமூக மக்களுக்கு பரப்பி வரும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு சவுதி அரேபியா அதிரடி தடை விதித்துள்ளது.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்புக்கு நிதியுதவி பெரும்பாலும், சவுதி அரேபியாவில் இருந்து தான் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று சவுதி அரேபியா அரசு, இந்த அமைப்பு தடை விதித்துள்ளது அந்த சமூக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவைப் பின்பற்றி மற்ற இஸ்லாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன, அங்குள்ள தப்லீக் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்வியாகியுள்ளது.
சவுதி அரேபிய அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டாக்டர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனச் சொல்லப்படும் தப்லிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சரியுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்துக்கு தப்லீக் ஜமாத்தால் ஆபத்து இருப்பதால், மசூதிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல், தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது.
சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்லீக் தவா குழுவை சவுதி அரசு தடை செய்வதாக, சவுதி அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாத்தில் சன்னி பிரிவைச் சேர்ந்த அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்பு இஸ்லாமியக் கருத்துகளை அந்தச் சமூகத்து மக்களுக்குப் போதிப்பது ஆகும்.
1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் உருவாக்கப்பட் இந்த அமைப்பு, குறிப்பாக ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது.
இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் 350 முதல் 400 மில்லியன் உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பினர் தங்கள் கவனம் முழுக்க மதத்தின் மீது மட்டுமே இருப்பதாகவும், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களை முற்றிலும் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.