உலகின் மிகப்பெரிய பாலைவன நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா... மணல் இறக்குமதியில் தீவிரம்
சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றைக் கொண்டிருந்தாலும், அந்த நாடு அவுஸ்திரேலியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்கிறது என்ற விசித்திரமானத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நவீனக் கட்டமைப்பு வசதி
இதற்கான காரணம் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் உண்மையில் அடங்கியுள்ளது. ரூப் அல் காலி என்பது சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான மணல் பாலைவனம் ஆகும்.

இருப்பினும், கட்டுமானப் பணிகளுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்கிறது. பாலைவன மணலின் சிறப்புத் தன்மையே இதற்கு காரணம். இம்மணல் நவீனக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு ஏற்றதல்ல.
சவுதி அரேபியா அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டுமானத் தரத்திலான சிலிக்கா மணலை இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் இவற்றின் மதிப்பு ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும், இது ஒரு விசித்திரமான உண்மையை வெளிப்படுத்துகிறது:
மணலால் சூழப்பட்ட ஒரு நாடு, கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எல்லா மணலும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காற்று பாலைவன மணலை உருவாக்கியுள்ளது.
இந்தச் செயல்முறை, மணலின் துகள்களை உருண்டையாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது. இதனால், அந்தத் துகள்கள் சிறிய கோலிகளைப் போலச் செயல்பட்டு, சிமெண்டுடன் ஒட்டாமல் போகின்றன.
கான்கிரீட் துகள்கள் ஒன்றோடொன்று பிணைந்து வலிமையை உருவாக்கும் வகையில் சொரசொரப்பாகவும் கோணங்களாகவும் இருக்க வேண்டும். இந்தப் பண்புகள் இல்லாத பட்சத்தில், கட்டிடங்கள் பலவீனமாகவும் நீடித்துழைக்கும் தன்மை குறைந்தவையாகவும் ஆகிவிடும்.

மணல்தான் அதிகம்
சவுதி அரேபியாவில் இறக்குமதி செய்யப்படும் மணலுக்கான தேவை, அந்நாட்டின் 'விஷன் 2030' திட்டத்துடன் தொடர்புடையது. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் திட்டங்கள் மூலம், எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, பொருளாதாரத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், NEOM மற்றும் The Line போன்ற திட்டங்களுக்கு அதிக வலிமை கொண்ட கான்கிரீட் பெருமளவில் தேவைப்படுவதால், பொருத்தமான கட்டுமானப் பொருட்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிக்கையின்படி, நீருக்கு அடுத்தபடியாக மணல்தான் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது இயற்கை வளமாகும். இதன் ஆண்டுத் தேவை சுமார் 50 பில்லியன் டன்கள் ஆகும்.
மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்படும் மணலைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பாறைகளை நொறுக்கி கூர்மையான துகள்களாக உற்பத்தி செய்யப்படும் செயற்கை மணலில் சவுதி அரேபியா முதலீடு செய்து வருகிறது. அதுவரையில், அந்தப் பாலைவன நாடு தனது எதிர்கால வளர்ச்சிக்கு வெளிநாட்டு மணலையே சார்ந்திருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |