உலகின் மொத்த கவனமும் கால்பந்து உலகக் கிண்ணம் மீது... சவுதி அரேபியா ரகசியமாக செய்து முடித்த கொடுஞ்செயல்
இனி மரண தண்டனை விதிப்பதில்லை என உறுதி கூறி வந்த சவுதி அரேபியா, உலக மக்களின் கவனம் மொத்தம் கட்டார் கால்பந்து உலகக் கிண்ணம் மீது திரும்பியுள்ள நிலையில், தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மரண தண்டனை
உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் கட்டார் நாட்டில் நடந்துவரும் நிலையில், உலக நாடுகளின் கவனம் தற்போது கட்டார் மீது திரும்பியுள்ளது. இந்த நிலையிலேயே 14 நாட்களில் மொத்தம் 12 குற்றவாளிகளின் தலையை துண்டித்து சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
@reuters
போதைமருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கே மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சவுதி அரேபிய நிர்வாகம் 2021ல் தடை விதித்துள்ள நிலையிலேயே 12 பேர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, கட்டார் உலகக் கிண்ணம் துவக்க நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்டுள்ளதுடன், Fifa தலைவரின் அருகாமையில் அமர்ந்திருந்தார்.
போதை மருந்து கடத்தல்
சவுதி அரேபியா இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முன்னெப்போதையும் விட அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என கூறப்படுகிறது. தற்போது போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்குவோருக்கும் ரகசியமாக மரண தண்டனை விதித்து வருகிறது.
இந்த நிலையில், டாக்ஸி சாரதி ஒருவர் அடுத்து மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது டாக்ஸியில் இருந்து போதை மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதில் இவருக்கு தொடர்பேதும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
@reuters
இருப்பினும், சவுதி பொலிசார் இவரை சித்திரவதைக்கு உட்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக அவரது சகோதரி குற்றஞ்சாட்டியுள்ளார். சவுதி அரேபியாவின் மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, குறித்த டாக்ஸி சாரதியின் உயிரை காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மூவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனவும், சிரியா நாட்டவர்கள் நால்வர், மூவர் சவுதி நாட்டவர்கள் மற்றும் இருவர் ஜோர்டான் நாட்டவர்கள் எனவும் 13வது நபராக அந்த டாக்ஸி சாரதியின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 138 குற்றவாளிகளுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.