வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு தடை! சவுதி அரசு முக்கிய அறிவிப்பு
கொரோனா காரணமாக இந்த ஆண்டும் வெளிநாட்டிலிருந்து ஹஜ் பயணிகள் வருவதற்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியில் கடைசி மாதமான துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு, ஜூலை 17 தொடங்கி ஜூலை 22 வரை ஹஜ் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதிலும் இருந்து இரண்டரை கோடி பேர் சவுதி அரேபியாவின் மக்கா நகரத்தில் சங்கமிப்பார்கள். மக்காவில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை முடித்துக்கொண்டு மற்றொரு புனித நகரமான மதினாவுக்குச் செல்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் செய்ய அனுமதியில்லை என்று சவுதி அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டும் வெளிநாட்டிலிருந்து ஹஜ் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மக்கா மற்றும் மதீனாவுக்கு யாத்திரை மேற்கொள்ள சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு 60,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சவுதியில் வாழும் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.