அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்
தங்கள் எல்லைகளில் திரண்ட புலம்பெயர் மக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் படைகள் கண்மூடித்தனமான பலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அதில், இறப்புகள், காயங்கள் மற்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. 2019 மற்றும் 2024 க்கு இடையில் அண்டை நாடான யேமனில் இருந்து கடக்க முயற்சிக்கும் எத்தியோப்பிய புலம்பெயர் மக்களே, தாங்கள் எதிர்கொண்ட கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
2022ல் டசின் கணக்கானவர்களுடன் சவுதியின் நஜ்ரான் மாகாணத்தில் இரவு கடந்து சென்ற போது சவுதி இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பலர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுக்கு பயந்து பல புலம்பெயர்ந்தோர் தப்பிக்க முயன்றபோது குன்றிலிருந்து விழுந்தனர். மற்றவர்கள் பிடிக்கப்பட்டனர் அல்லது துப்பாக்கிச் சூடுக்கு காயமடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
2023 ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் ஒன்றின் அறிக்கையில், சவுதி எல்லைக் காவலர்கள் மார்ச் 2022 முதல் ஜூன் 2023 வரை யேமனின் தெற்கு எல்லையில் நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கொன்றனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான பயணம்
துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய மறுத்த எத்தியோப்பிய நபரை சவுதி எல்லைக் காவலர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சுமார் 750,000 எத்தியோப்பிய குடியேறியவர்கள் உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக நம்பப்படுகிறது. கட்டுமானம், பண்ணைகள் மற்றும் வீட்டு வேலையாட்கள் போன்றவற்றில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
வேலை தேடி ஏமன் வழியாக சட்டவிரோதமாக பயணம் செய்யும் எத்தியோப்பியர்கள் உள்நாட்டு மோதல்கள், வறுமை மற்றும் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
2022 மற்றும் 2023 க்கு இடையில், இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட எத்தியோப்பியர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதம் அதிகரித்து 96,670 ஐ எட்டியது.
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் புலம்பெயர் மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க சவுதி அரேபியா கொடூர முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |