போனில் இருந்து பல புகைப்படங்கள்... பெற்றோருக்கு தெரியாமல் இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி! கொந்தளிக்கும் மனித உரிமைகள் குழு
சவுதியில் 17 வயதில் குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு 26 வயதில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு போராட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட Mustafa Hashem al-Darwish என்ற இளைஞருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட வன்முறை போராட்டங்களில் Mustafa Hashem al-Darwish பங்கேற்றது மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் அவரின் போனில் இருந்தாக கூறப்படுகிறது.
அந்த படங்களை ஆதாரமாக வைத்து சவுதி பொலிசார் 2015 ஆம் ஆண்டு அவரை கைது செய்துள்ளனர்.
Darwish மீது தீவிரவாத குழுவை உருவாக்கி ஆயுதமேந்திய கிளர்ச்சியை மேற்கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதாக சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
இந்நிலையில், சிறார்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்ததாக சவுதி உறுதியளித்த போதிலும், Darwish 17 வயதில் செய்த குற்றத்திற்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அநியாயம் என மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மரண தண்டனை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த மனித உரிமைகள் குழு, விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தது நினைவுக் கூரத்தக்கது.
முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Darwish, பின்னர் அதிகாரிகள் தன்னை துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக உண்மையை உடைத்தார். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சவுதி அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்தனர்.
இந்நிலையில், Dammam நகரில் Darwish-க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Darwish-க்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவது குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து செய்ததாக அறிவத்த சவுதி அரசு, தற்போது 17 வயதில் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது சர்வதேச சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.