ட்ரம்பை நெருக்கும் சவுதி அரேபியா... ஈரானில் களமிறங்கும் ஐக்கிய அரபு அமீரகம்
மத்திய கிழக்கை மறுசீரமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகால அச்சுறுத்தலாக
அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு இளவரசர் முகமது பின் சல்மான், டொனால்ட் ட்ரம்பை தொடர்ந்து நெருக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய ஈரானிய ஆட்சி நீடிக்கும் வரையில், ஈரானை ஒரு நீண்டகால அச்சுறுத்தலாகவே சவுதி இளவரசர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
ஈரான போரை முடித்துக் கொள்ள ட்ரம்ப் தயாராகி வந்தாலும், ஈரான் மீண்டெழ முடியாத வகையில் சேதம் ஏற்படுத்த ட்ரம்பை சவுதி பட்டத்து இளவரசர் தூண்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானியத் தாக்குதல்கள் மீதான சவுதியின் பொறுமை வரம்பற்றதல்ல என்று, சவுதி வெளிவிவகார அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் கடந்த வாரம் தெரிவித்த நிலையில், தற்போது போரை அல்ல, அமைதியையே நாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ஈரானில் இராணுவத்தை அனுப்புவது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகமும் திட்டமிட்டுவருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் 3,000 வான்வழிப் படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் தனது கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை ஏற்றுமதி செய்யும், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவைக் கைப்பற்ற இவை பயன்படுத்தப்படலாம் என்றே கூறப்படுகிறது.

ஆனால், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், சரியான தரப்புடன் அமெரிக்கா தற்போது பேசி வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புஷேர் அணுமின் நிலையம்
ஈரானின் அணுமின் நிலையங்கள் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே, பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் இதுவரை வெளியிட்டுள்ள தகவல் அனைத்தும் வெறும் பொய்த்தகவல் என்றே ஈரான் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது புஷேர் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது; எனினும், இதில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏதும் ஏற்படவில்லை.
மத்தியஸ்தர்கள் வாயிலாக அமெரிக்காவிடமிருந்து தங்களுக்குக் குறிப்புகள் கிடைத்தன; அவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |