மருத்துவ உதவி மறுப்பு... விமான நிலையத்தில் கைது: 3 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையான இளவரசி
சவுதி அரேலியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, வழக்கேதும் பதியாமல் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபிய அரச குடும்பத்து உறுப்பினரும் பெண்கள் உரிமைகளுக்காக போராடியவருமான 57 வயதான Basmah bin Saud என்பவரே மூன்றாண்டுகளுக்கு பின்னர் விடுதலையாகியுள்ளார்.
2019 மார்ச் மாதம் திடீரென்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவருடன் சிறையிருந்த அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ உதவியை நாடிய அவருக்கு சவுதி நிர்வாகம் மருத்துவ உதவிகளை மறுத்து வந்துள்ளது. இதுவரையில் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் சவுதி நிர்வாகம் முன்வைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2019 மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு, விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார். அவருக்கு என்ன நோய் என்பது தொடர்பான தகவல் ஏதும் குடும்பத்தினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இளவரசர் முகமது சல்மான் பொறுப்பேற்ற பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்க்களை நாட்டில் அமுலுக்கு கொண்டு வந்துள்ளார்.
இருப்பினும், அரசியல் எதிரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் உள்ளனர்.