ஈரான் மீது ரகசிய தாக்குதல் நடத்திய சவுதி, அமீரகம்., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்
ஈரானுக்கு எதிராக இரண்டு வளைகுடா நாடுகள் நேரடியாக தாக்குதல் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய இரு நாடுகளும் ஈரானுக்கு எதிராக இரகசியமாக விமானத் தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
சவுதி அரேபியா, தனது நாட்டில் நடந்த ஈரான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மார்ச் மாத இறுதியில் ஈரானின் நிலப்பரப்பில் விமானத் தாக்குதல்கள் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அமீரகமும் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஏப்ரல் 8 அன்று நடந்த தாக்குதல், ஈரானின் லாவான் தீவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது.
இந்த தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக பிப்ரவரி 28 அன்று தொடங்கிய விமானத் தாக்குதல்களின் பின்னணியில் நடந்தவை.
அதற்கு பதிலாக, ஈரான் அனைத்து வளைகுடா நாடுகளையும் (GCC), குறிப்பாக அமெரிக்க தளங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியது. இதில், விமான நிலையங்கள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவை தாக்குதலுக்குள்ளானது.
இந்த சூழலில், சவுதி மற்றும் UAE இரகசியமாக ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், சர்வதேச வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி மற்றும் அமீரகத்தின் இந்த நடவடிக்கைகள், ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளும் நேரடியாக ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன. இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |