எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிரடியாகத் திட்டமிட்ட சவுதி அரேபியா: மொத்தமாக முடித்த ஹவுதிகள்
கடுமையான எண்ணெய் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் திணறிவரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு திட்டமிட்ட சவுதி அரேபியாவுக்கு பேரிடியாக ஹவுதிகள் களமிறங்கியுள்ளனர்.
ஹவுதிகள் போரில்
சவுதி அரேபியா, வழக்கமாக ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களுக்காக ஒதுக்கப்படும் மில்லியன் கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை, தனது செங்கடல் துறைமுகமான யான்புவிற்குத் திருப்பிவிடத் தொடங்கியது.

ஆனால், கடந்த வார இறுதியில் ஈரான் ஆதரவு ஹவுதிகள் போரில் நுழைந்ததன் மூலம், அந்த உயிர்நாடியையும் துண்டிக்கும் அளவுக்குப் போர் தீவிரமடைந்துள்ளது.
செங்கடலில் இருந்து சவுதி எண்ணெய் வெளியேறுவதற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த நடவடிக்கையும், உலகளாவிய எண்ணெய் விலைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த இரண்டு வாரங்களில் யான்பு துறைமுகத்தில் கப்பல்களில் ஒரு நாளைக்கு 4.6 மில்லியன் பீப்பாய்கள் வரை ஏற்றப்பட்டன — இது 2025 ஆம் ஆண்டின் சராசரியை விட மூன்று மடங்குக்கும் அதிகமாகும்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் உலகம் இழக்கும் 15 மில்லியன் பீப்பாய் எண்ணெய்க்கு இது ஒரு சிறிய ஈடு என்றே கூறப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், யேமனைத் தளமாகக் கொண்ட ஹவுதிகள், பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர். காஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த கொடூரப் போருக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை ஹவுதிகளால் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள், கப்பல் நிறுவனங்களை நீண்ட வழித்தடத்தைப் பயன்படுத்தத் தூண்டின. இதனால் பயண நேரங்கள் வாரக்கணக்கில் அதிகரித்ததோடு, எரிபொருள், காப்பீடு மற்றும் மாலுமிகளின் ஊதியம் ஆகியவற்றிற்காகவும் அவர்கள் அதிகமாகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்தின் முதல் 28 நாட்களில், பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாகக் கடந்து செல்லும் கச்சா எண்ணெயின் அளவு, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூடுவது சாத்தியம்
திங்களன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டொலர் என வர்த்தகம் செய்யப்பட்டது. பாப்-எல்-மண்டேப் நீரிணையும் எண்ணெய் கப்பல்கள் கடப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக மாறினால், அடுத்த சில மாதங்களில் பிரென்ட் விலை ஒரு பீப்பாய்க்கு 150 டொலரைத் தாண்டுவதற்கு மிகவும் வாய்ப்புள்ளது என்றே கூறுகின்றனர்.
சனிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி இரண்டு ஏவுகணைகளை வீசியதன் மூலம் ஹவுதிகள் அதிகாரப்பூர்வமாகப் போரில் நுழைந்தனர். இந்த நிலையில், ஹவுதி அரசாங்கத்தின் தகவல் துறை துணை அமைச்சர் முகமது மன்சூர் தெரிவிக்கையில்,

பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடுவது ஒரு சாத்தியமான வழிமுறை என்றும், அதன் விளைவுகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலே ஏற்க வேண்டியிருக்கும் என்றார்.
ஹவுதிகளிடம் ட்ரோன்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் குவிந்துள்ளன, அவை நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும்.
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த நகர்வுகள், ஹவுதிகளை பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடும் நிலைக்கு தள்ளக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |