சூரிய கிரகணம் உயிர் பலி வாங்கும் எனக்கூறும் வதந்திகள்: அறிவியலாளர்கள் விளக்கம்
இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.
சூரிய கிரகணத்தின்போது பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகமே இருளில் மூழ்கிவிடும் என்றும் பல வதந்திகள் இணையத்தில் பரவிவரும் நிலையில், அவை குறித்து அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
உலாவரும் வதந்திகள்
நாசாவிலிருந்து ’Project Anchor’ என்னும் ஒரு ஆவணம் லீக் ஆகியுள்ளதாகவும், அது, சூரிய கிரகணத்தின்போது பூமி 7 விநாடிகளுக்கு புவியீர்ப்பு விசையை இழக்கும் என்று கூறுவதாகவும் ஒரு வதந்தி பரவிவருகிறதாம்.

அப்படி பூமிக்கு புவியீர்ப்பு விசை இல்லால் போவதால், 40 மில்லியன் மக்கள் கீழே விழுந்து உயிரிழப்பார்கள், உள் கட்டமைப்பு நாசமாகும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என பயமுறுத்துகிறது அந்த வதந்தி.
இந்த வதந்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள நாசா, 2026ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 12ஆம் திகதி, பூமி தனது ஈர்ப்பு விசையை இழக்காது என்றும், பூமியின் ஈர்ப்பு விசை, அதன் நிறையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
அதாவது, பூமியின் அமைப்பில், அதன் மையப்பகுதி, வெளிப்புறம், நடுப்பகுதி, பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் ஆகிய அனைத்தும் தங்கள் நிறையை இழந்தால்தான் பூமி அதன் ஈர்ப்பு விசையை இழக்கும் என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதுபோக, பல நாட்கள் மின்தடை, தொலைபேசி சேவை பாதிப்பு ஏற்படும் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன.
ஆனால், சூரிய கிரகணம் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒரு அறிவியல் நிகழ்வு, அது ஆயுதமோ, தீய சடங்கோ அல்ல என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
உண்மையில், ஒரே நேரத்தில் பலர் சூரிய கிரகணம் தொடர்பான காணொளிகளைப் பார்க்க முயல்வதால், சில இடங்களில் இணைய சேவையின் வேகம் வேண்டுமானால் குறையலாம்.
ஆக, சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வருவதால், பூமி மீது சந்திரனின் நிழல் விழுகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரகணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |