தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்
பிரித்தானியாவில் தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் தேசமாக ஸ்கொட்லாந்து மாறியுள்ளது.
ஸ்கொட்லாந்து அரசு, பாரம்பரிய தகனம் மற்றும் அடக்கம் செய்யும் முறைக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் தகனம் (Hydrolysis) முறையை அனுமதித்துள்ளது.
இதன் மூலம், பிரித்தானியாவில் முதன்முறையாக நீர் தகனம் சட்டபூர்வமாகிறது.

இந்த முறையில் உடல் முதலில் எடைபோடப்பட்டு, சிறப்பு இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர், 150 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் நீர் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவையில் 90 நிமிடங்கள் வரை வைக்கப்படுகிறது.
இதனால் உடலின் மென்மையான திசுக்கள் கரைந்து, எலும்புகள் மட்டும் மீதமாகின்றன. அவை 120 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, Cremulator எனும் இயந்திரத்தில் சாம்பலாக மாற்றப்படுகின்றன.
ஸ்கொட்லாந்து சுகாதார அமைச்சர் ஜென்னி மின்டோ, இதுகுறித்து கூறியதாவது: 120 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தகன முறையை அறிமுகப்படுத்துகிறோம். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும், அதுமட்டுமின்றி மக்களுக்கு கூடுதல் தெரிவுகளை வழங்கும் என கூறியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 84 சதவீத மக்கள் நீர் தகனத்தை ஆதரித்தனர். இதனால் அரசு சட்டத்தை நிறைவேற்றியது.
நீர் தகனம் அமெரிக்காவின் 28 மாநிலங்களில், கனடா, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Scotland water cremation, Scottish Parliament funeral law, Water cremation process, Hydrolysis, Scotland first UK nation hydrolysis #Scotland #WaterCremation #Hydrolysis