கொளுத்தும் வெயில்... குடிநீருக்காக வன்முறையில் குதித்த மக்கள்: பொலிஸ் துப்பாக்கிச் சூடு
ஈரானில் சமீப நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால், குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த Khuzestan பிராந்தியத்தில் வாரங்கள் நீடித்த குடிநீர் தட்டுப்பாட்டால் ஜூலை 15 முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தற்போது பல பிராந்தியங்களில் வியாபித்து வருகிறது. Khuzestan பிராந்தியத்தில் Ahvaz நகரில் திங்கட்கிழமை நிலவரப்படி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியுள்ளது.
பல பகுதிகளில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. அரசாங்கத்தாலும் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழல் உள்ளது.
இதனால் பல இடங்களிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். Khuzestan பிராந்தியத்தில் நடந்த போராட்டத்தில் மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட பொதுமக்களில் மூவர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஈரானிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.