ரம்ஜான் கலவரம்... ஒரே நாளில் 29 பேர்களுக்கு மரணத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
காங்கோ குடியரசு நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 29 பேர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருவேறு இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே நடந்த இந்த கலவரத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதுடன், டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள தியாகிகள் மைதானத்திற்கு வெளியே திரண்ட இஸ்லாமியர்கள், விழாவை எந்த குழுவினர் முன்னெடுத்து நடத்துவது என்ற வாக்குவாதம், பின்னர் கலவரமாக வெடித்துள்ளது.
இதனையடுத்து பொலிசார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இந்த கலவரத்தில் பல அதிகாரிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை இன்னமும் ஆபத்து கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் நேரலை செய்யப்பட்டதுடன், இரவு முழுக்க நீடித்தது. இதில் 31 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதுடன், அதில் 29 பேர்களுக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
எஞ்சிய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசு நாட்டில் மரணத்தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.