குடியிருப்புகளை தீக்கிரையாக்கி உயிருடன் கொளுத்தப்பட்ட 32 பேர்: அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னணி
மடகாஸ்கரில் வீடுகளுக்கு தீ வைத்து குறைந்தது 32 பேரைக் கொன்ற குற்றக் கும்பலை தேடும் நடவடிக்கையில் ராணுவம் ஹெலிகொப்டரில் களமிறங்கியுள்ளது.
கொல்லப்பட்ட மொத்த பேர்களையும் மூன்று குடில்களில் கட்டிவைத்து, பின்னர் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
அன்கசோபேயில் வெள்ளிக்கிழமை நடந்த இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவலில், dahalo என உள்ளூரில் அறியப்படும் கால்நடைத் திருடர்களே இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கால்நடைத் திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பயங்கரமான வன்முறை மோதல்களாகவே மாறியுள்ளது. அன்கசோபே பகுதியில் நடந்த இந்த கோர சம்பவத்தில் குடியிருப்புகள் மொத்தமாக தீக்கிரையாகியுள்ளதுடன் தற்போது சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பகுதியை பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர், கால்நடைத் திருட்டு கும்பலுக்கு எதிரான முந்தைய பாதுகாப்பு நடவடிக்கையின் போது அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதற்காக இப்பகுதி மக்கள் குறிவைக்கப்பட்டதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்யப்படும் எனவும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.