பிரித்தானியாவுக்கு படகுகள் மூலம் வரும் புலம்பெயர்வோருக்கு கடும் தண்டனை: அவுஸ்திரேலியாவைப் போன்றதொரு நடவடிக்கைக்கு உள்துறைச் செயலர் திட்டம்...
முந்தைய பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலைப்போலவே, புதிய உள்துறைச் செயலரான சுவெல்லாவும் சட்ட விரோத புலம்பெயர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.
அவ்வகையில், ஆங்கிலக் கால்வாயை சிறு படகுகள் மூலம் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் நாடுகடத்தப்படலாம்.
அவுஸ்திரேலியாவுக்கு சிறு படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாடு சிறையிலடைப்பதைப் போல, பிரித்தானியாவும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றனர்.
Credit: Steve Finn
உள்துறைச் செயலராக இருந்த பிரீத்தி பட்டேல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக சுவெல்லா பிரேவர்மேன் புதிய உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
உள்துறைச் செயலர்தான் மாறினாரேயொழிய, புலம்பெயர்தல் குறித்த பிரித்தானியாவின் பார்வை மாறவில்லை.
அவரும் இப்போது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துவங்க, அல்லது, தொடர இருக்கிறார் என்று கூட கூறலாம்.
அவ்வகையில், இனி ஆங்கிலக் கால்வாயை சிறு படகுகள் மூலம் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் நாடுகடத்தப்படலாம்.
இதற்கு முன், கடந்த ஜூன் மாதத்திலேயே சிறு படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது சட்ட விரோதம் என சட்டம் இயற்றப்பட்டது.
ஆனாலும், அதிகாரிகள் கடத்தல்காரர்களைத்தான் குறிவைத்தார்கள். ஆனால், புதிய உள்துறைச் செயலரான சுவெல்லாவோ, சட்ட விரோத புலம்பெயர்வோர் மீதும் கவனம் செலுத்த உள்ளார். ஆக, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோருக்கு இனி சிறை அல்லது நாடுகடத்தல் தண்டனையாக வழங்கப்படக்கூடும்.
அத்துடன், கடத்தல்காரர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் செலவிடும் வகையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.