சச்சின் கீழே விழுந்தார்! என்னை உயிரோடு கொளுத்திடுவாங்க என பயந்தேன்... வேகப்பந்து ஜாம்பவான் ஷோயிப் அக்தர் ரீவைண்ட்
சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருந்தால், இந்தியர்கள் என்னை உயிரோடு கொளுத்தியிருப்பார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றால் இந்த ஆட்டத்துக்குரிய பரபரப்பு வேறு எந்த ஆட்டத்துக்கும் கிடையாது. இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணம் செய்து விளையாடியது குறித்து ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் நினைவுக்கூர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்குப்பின் எனக்கு அதிகமான அன்பையும், வரவேற்பையும் அளித்த நாடு இந்தியாதான். இந்தியப் பயணத்தின் போது மறக்க முடியாத பலநினைவுகள் இருக்கின்றன.
கடந்த 2007-ம் ஆண்டு பயணத்தின் போது, ஒருபோட்டியில் வென்றுவிட்டு, விருது வழங்கும் விழாவுக்காக இருஅணிகளும் காத்திருந்தோம். வழக்கம்போல் நான் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என நினைத்தேன். சச்சின் டெண்டுல்கருக்கு விருது கொடுத்தவுடன் திடீரென அவரைத் தூக்கினேன்.
இதை சச்சின் கூட எதிர்பார்க்கவில்லை. விளையாட்டுக்காகத் தூக்கினேன், ஆனால், என்னால் சச்சினை பேலன்ஸ் செய்ய முடியாமல் திடீரென கைகளை விட்டுவிட்டேன். சச்சின் தரையில் விழுந்தார். சச்சின் கீழே விழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு இதயத்துடிப்பு எகிறியது. நான் செத்தேன் , என்னை தொலைத்துக்கட்டப்போகிறார்கள் என மனதுக்குள் பயந்தேன்.
சச்சினுக்கு மட்டும் ஏதேனும் உள்காயம் ஏற்பட்டிருந்தால், நான் ஒருபோதும் இனிமேல் இந்தியா விசா பெற முடியாது. நிச்சயமாக இந்தியாவை விட்டு என்னை உயிரோடு இந்திய ரசிகர்கள் அனுப்பமாட்டார்கள், அல்லது உயிரோடு கொளுத்திவிடுவார்கள் என அச்சப்பட்டேன்.
ஆனால், மருத்துவர் வந்து பரிசோதித்த பின் சச்சினுக்கு எந்த காயமும் இல்லை. நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்தபின்புதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.
அதன்பின் சச்சினிடம் உங்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகப்பெரிய சிக்கலில் முடிந்திருக்கும்.குறிப்பாக இந்திய ஊடகங்களும் , ரசிகர்களும் என்னை ஏதாவது செய்திருப்பார்கள் என்று சொன்னேன் என கூறியுள்ளார்.