அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம், பலர் காயம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு
திங்கள்கிழமை (பிப்ரவரி 13) நள்ளிரவு 12:30 மணியளவில், லான்சிங் நகரத்தில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த சம்பவத்தில், வளாகத்தில் உள்ள பெர்கி ஹாலில் இரண்டு பேர் மற்றும் MSU யூனியனுக்குள் ஒருவர் என மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
AP
மிச்சிகன் மாநிலத்தின் இடைக்கால துணை பொலிஸ் தலைவர் கிறிஸ் ரோஸ்மேன், வளாகத்தில் இனி அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார்.
தஞ்சம் அடையும்படி பொலிசார் உத்தரவு
துப்பாக்கிச்சூட்டின் சத்தம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து, கிழக்கு லான்சிங் வளாகத்திற்கு, அவரவர் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக தஞ்சம் அடையும்படி பொலிசார் உத்தரவு பிறப்பித்தனர். அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிசெய்தப்பின் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
MSU-வின் கிழக்கு லான்சிங் வளாகத்தில் 50,000 பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்கள் உள்ளனர்.
காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மிச்சிகன் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வளாகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்ததாகவும், அவரது அடையாளத்தை அறிய அதிகாரிகள் முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.