வணிக வளாகம் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதல்... ஆபத்தான நிலையில் 12 வயது சிறுவன்
பின்லாந்தில் தீவிர வலதுசாரி நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர், வணிக வளாகம் ஒன்றில் முன்னெடுத்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலை முயற்சி வழக்கு
இதில் இரு சிறுவர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் 12 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்லாந்தின் வடக்கு நகரான Ouluவில் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பின்லாந்தின் தேசிய விசாரணை அமைப்பான NBI வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும், தாக்குதல் சம்பவத்தின் சரியான நோக்கம் தொடர்பில் காவல்துறை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், தாக்குதல்தாரியின் பின்னணி குறித்து அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளதாகவும், அந்த நபர் தீவிர வலதுசாரி என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டுப் பின்னணி கொண்ட அந்த 12 வயது பின்லாந்து சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாலும், தற்போது தீவிர கட்டத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளனர்.
Oulu நகரத்தில் அமைந்துள்ள Valkea வணிக வளாகத்திலேயே தொடர்புடைய கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிவரும் புதிய தகவலில், தாக்குதலில் ஈடுபட்டவர் Sebastian Lämsä என்றும், சிறுவனை மிகக் கொடூரமாக பலமுறை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தீவிர வலதுசாரி அமைப்பு
இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர். Sebastian Lämsä ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என்றும், தீவிர வலதுசாரி அமைப்புகளில் தொடர்புடையவர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, 2020 முதல் பின்லாந்தில் தடை செய்யப்பட்ட தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் முதன்மை உறுப்பினர் இந்த Sebastian Lämsä என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, வணிக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பின்லாந்து பிரதமர் Petteri Orpo கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீவிர வலதுசாரி வன்முறை என்பது பின்லாந்து எதிர்கொள்ளும் முதன்மையான அச்சுறுத்தல் என்றும் அவர் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பின்லாந்தில் எந்த விதமான தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |