கொள்ளையர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: கிரீஸ் தீவுவாசிகள் செய்துள்ள நெகிழவைக்கும் செயல்
கிரீஸ் நாட்டில் கணவன் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்துவந்த பிரித்தானிய பெண் ஒருவர் கொள்ளையர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கரோலின் (Caroline Crouch, 20) என்ற அந்த இளம்பெண், தன் கணவரான பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), மற்றும் தனது 11 மாத பெண் குழந்தை லிடியாவுடன் ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த முகமூடிக்கொள்ளையர்கள் சிலர், கொள்ளையடிக்கும் முயற்சியின்போது குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்ட, அதைக் கண்டு சத்தமிட்ட கரோலினை சுமார் ஒரு மணி நேரம் சித்திரவதை செய்து கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார்கள்.
இந்த சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கொள்ளையர்கள் யாரும் சிக்காத நிலையில், தான் வளர்ந்த, தான் மிகவும் நேசித்த கிரீஸ் தீவுகளில் ஒன்றான Alonisso தீவுக்கு கரோலினின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
கரோலினுடய உடலை சுமக்கும் சவப்பெட்டியுடன் கார் ஒன்று அத்தீவுக்கு செல்வதற்காக படகு ஒன்றில் ஏற்றப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கரோலின், பிரித்தானியரான தன் தந்தை David மற்றும் பிலிப்பைன்சைச் சேர்ந்த தன் தாய் Susan ஆகியோருடன் Alonisso தீவில்தான் வளர்ந்துள்ளார்.
அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் நிலையில், அத்தீவுவாசிகள் கரோலினை கௌரவிக்கும் வகையில் கடைகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தையும் மூடியுள்ளார்கள்.